புதன், 8 பிப்ரவரி, 2012


தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!

திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.

ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிர, அதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது.

7 மணி நேரம் பவர்கட்-பாழாய்டுமோ படிப்பு?: கவலையில் பிளஸ்டூ மாணவர்கள்!!

தற்போது பிளஸ் டூ செய்முறை தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதே போல மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கின்றன. தேர்வுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் மாணவர்கள் இரவு பகல் பாராது தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதே போல பத்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்வுக்கு மும்முரமாக படித்து வருகின்றனர். இரவு நேர மின்தடை, அதிகாலை மாயமாகும் மின்சாரத்தால் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்வை சரிவர எழுத முடியாமல் அவர்களது மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டுள்ள 4 புதிய மின் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர 2013 அல்லது 2014 ஆகலாம். அந்தத் திட்டங்கள் வந்தால் மட்டுமே தமிழக மக்களின் இருட்டுக்கு ஓரளவு விடிவு பிறக்கும். அதுவரை?


More Info: http://tamil.oneindia.in/news/2012/02/08/tamilnadu-tn-people-struggle-with-more-than-8-hours-aid0136.html

மக்களிடம் எடுபடாத அரசு கேபிள் டிவி.. விலகும் ஆபரேட்டர்கள்!

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவையில் மக்கள் விரும்பிப் பார்க்கும் சன் டிவி உள்ளிட்ட முக்கிய சேனல்கள் இல்லாததால், மக்களிடையே இந்த சேவை எடுபடவில்லை. இதனால் அரசு கேபிள் டிவியில் மிக ஆர்வமாக இணைந்த ஆபரேட்டர்கள் அதிலிருந்து விலக ஆரம்பித்துள்ளனர். இதனால் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.


தூத்துக்குடியில் அரசு கேபிள் டிவி ஒளிப்பரப்பை நிறுத்திவிட்டு, பழையபடியே தங்கள் ஒளிப்பரப்பை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொடர்ந்து வருகின்றனர். அதே போல நாகை, ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கேபிள் ஆபரேட்டர்கள், மாவட்ட கலெக்டர்களை சந்தித்து இதே புகார்களை அடுக்கியுள்ளனர்.இந் நிலையில் அரசு கேபிளில் சேர முன்வராத ஆபரேட்டர்களை மிரட்டும் வேலைகளும் ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


முதல்கட்டமாக 70 இலவச சேனல்களைக் கொண்டு இந்த ஒளிபரப்புச் சேவை தொடங்கும் என்றும், கட்டண சேனல்களை சேர்த்து பின்னர் 90 சேனல்கள் அளிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் அதிகமாகப் பார்க்கப்படும் சன் டிவி சேனல்களோ, ராஜ் டிவி சேனல்களோ, விஜய் டிவியோ அதில் இல்லை


தமிழ் சேனல்களை பொருத்தவரை சன் குழும சேனல்களே முதலிடத்தில் உள்ளன. இந்தச் சேனல்கள் தெரியாததால், அவற்றில் வரும் தொடர் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் இல்லத்தரசிகள் கடும் கோபம் கொண்டுள்ளனர். தங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டர்களை துளைத்தெடுக்கின்றனர், ஏன் சன் டிவி தெரியவில்லை என்று.


செவ்வாய், 7 பிப்ரவரி, 2012




செவ்வாய் கிரகம் உயிர்கள் வாழ தகுதியற்றது : விஞ்ஞானிகள் தகவல்



செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதியற்றது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2008ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளையும், செயற்கைகோள் அனுப்பிய புகைப்படங்களையும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.



3 வருட ஆய்வுக்கு பிறகு தற்போது உயிரினங்கள் வாழ செவ்வாய் கிரகம் தகுதியற்றது என கண்டறிந்துள்ளனர். ஏனெனில் அங்கு 60 கோடி ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுகிறது. எனவே அங்கு உயிர் வாழ போதிய அளவு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் ஐஸ்கட்டிகள் படர்ந்துள்ளன. அதனால் தான் அங்கு தண்ணீர் இருப்பதாக கருதப்பட்டது. அவை தவிர மற்ற பகுதிகளில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை மற்றும் தகுதி இல்லை என உறுதியான முடிவுக்கு வந்துள்ளது இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு.